ஊதிய உயர்வு வழங்கக்கோரி தென்காசியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தென்காசி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் முடங்கின. பல கோடி ரூபாய் பணபரிவர்த்தனைகள் முடங்கின.

Update: 2020-01-31 22:30 GMT
தென்காசி, 

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வங்கி பணிகள் முடங்கின. வங்கியில் காசோலை மூலம் நடைபெறக்கூடிய பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. சில வங்கிகள் திறந்து இருந்தன. ஆனால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகளில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் வந்து இருந்தனர். ஆனால் வங்கி காசோலை பண பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை.

மேலும் அரசு பணிக்கு விண்ணப்பிக்க செலுத்தக்கூடிய பணத்தை வங்கியில் செலுத்த முடியவில்லை. மேலும் வங்கியில் பணம் செலுத்த முடியாததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்றிதழ்கள், பத்திரங்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் அடைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் பணபரிவர்த்தனைகள் முடங்கியது. பல ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் இந்த போராட்டத்தால் பாதிப்பு அடைந்தனர்.

மேலும் செய்திகள்