விளாத்திகுளம் அருகே பரிதாபம்: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

விளாத்திகுளம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-02-04 05:00 GMT
விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாக்கிய ஜார்ஜ் (வயது 27). இவர் விளாத்திகுளம் தனியார் பள்ளிக்கூட வேனில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், தூத்துக்குடி ராஜாபாளையத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் மகள் மேரி ஹெர்மிக்கும் (20) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் பெரியசாமிபுரத்தில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மேரி ஹெர்மி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குறித்து தகவல் அறிந்ததும், சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மேரி ஹெர்மியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்