வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெட்டிக்கொன்று நகை, பணம் கொள்ளை

வீட்டில் தனியாக வசித்துவந்த பெண்ணை வெட்டிக்கொலை செய்துவிட்டு, 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-02-07 22:26 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த கன்னப்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா(வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருடைய கணவர் பார்த்தசாரதி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் மல்லிகா மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்துவந்தார்.

நேற்று மதியம் மல்லிகாவை பார்க்க அவரது உறவினரான மீனாட்சி என்பவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் சமையல் அறையில் மல்லிகா தலை, முகம், கை, கால்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

நகை-பணம் கொள்ளை

மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து மல்லிகாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்துஇருந்த தங்க சங்கிலி, கம்மல், மூக்குத்தி உள்பட 10 பவுன் நகை மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து கொலை யாளிகளை தேடி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்