அரசு திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் பேச்சு

சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து தெரிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.;

Update:2020-02-29 05:05 IST
ஈரோடு,

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் சிறுபான்மையினர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்த விழாவுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.

ஈரோடு மாவட்ட சிறுபான்மையினர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி சி.சைபுதீன் வரவேற்றார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்க இணை செயலாளர் சையது இப்ராகிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க இணை செயலாளர் ஏ.ஜான்சன் ஆகியோர் சிறுபான்மையினர் சார்பில் பேசினார்கள்.

விழாவில் சிறுபான்மையின மக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டார். மேலும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 10 பெண்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய கலெக்டர் சி.கதிரவன் பேசியதாவது:-

முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தமிழக அரசு, மத்திய அரசுகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மை மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை சென்னையில் இருந்து பெற்று வழங்கி இருக்கிறோம். இந்த கையேட்டினை வெகுஜன மக்கள் நன்றாக படித்து அதில் உள்ள திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினோர் அனைத்து தரப்பினருக்கும் மானியம், கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் முழுமையாக தெரிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்காக தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதில் விண்ணப்பித்தால் தகுதியானவர்களுக்கு நிதி பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்.

அரசு வழங்கும் திட்டங்கள் குறித்த விவரங்கள் சிறுபான்மையின மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லப்படவேண்டும். இதில் எந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கும் சட்டம் தொடர்பாக சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பரிசீலனையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார்.

சிறுபான்மையினர் மட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அரசு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இல்லை என்றால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேவையான சேவைகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை சரியான நேரத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்