ஆம்பூர் அருகே, கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆம்பூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 31). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தனது குடும்பத்தினருடன் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு திருமணத்திற்காக சென்று விட்டார்.
நேற்று முன்தினம் இரவு அவர் குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உமராபாத் போலீசில் அசாருதீன் புகார் செய்தார். அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.