ஊட்டி அருகே, மான்களை வேட்டையாடிய 4 பேர் கைது - ரூ.1 லட்சம் அபராதம்

ஊட்டி அருகே மான்களை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-06 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட சோலூர் பகுதியில் மான்கள், காட்டெருமைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு வனப்பகுதிகளையொட்டி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்கள் நடுவே புற்கள் வளருவதால், அதனை மேய்வதற்காக மான்கள் வந்து செல்கிறது. சமீப காலமாக சோலூர் உள்பட நீலகிரியில் சில கிராமங்களில் மான்களை வேட்டையாடுவது, புலிக்கு சுருக்கு வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சோலூரில் தனியார் எஸ்டேட் பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் கடமான்களை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வனச்சரகர் பாண்டியராஜ் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்டேட் தொழிலாளர்கள் கிரு‌‌ஷ்ணமூர்த்தி(வயது 38), இயேசுதாஸ்(39), பசுவராஜ்(49), வெங்கட்ராஜ்(32) ஆகிய 4 பேர் வேட்டை நாய்களை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று கடமான்களை துரத்தி சென்று வேட்டையாடியதும், பின்னர் உடலை சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

அவ்வாறு துரத்தி சென்று நாய்கள் கடிப்பதால் சோர்வடையும் கடமான்களை வேட்டையாடி உள்ளனர். இதையடுத்து உடனடியாக அந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறும்போது, கடமான்களை வேட்டையாடிய 4 பேர்களிடம் விசாரணை நடத்தியதில் 4 பேரும் தாங்கள் செய்ததை ஒப்புக்கொண்டனர். பிடிப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி வனவிலங்குகளை வேட்டையாடினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளி வர முடியாத 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்