திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு

திருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-03-25 00:15 GMT
செம்பட்டு,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த 13-ந் தேதி சுமார் 520 பேர் சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். அவர்கள் இம்மாதம் 20-ந் தேதி மலேசியா செல்ல முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் மலேசியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு செய்திருந்தவர்களும் திருச்சி விமான நிலையம் வந்தனர்.

இதனால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் மலேசிய துணை தூதரக அதிகாரி பிர்தவுஸ், போலீஸ் அதிகாரிகள் மணிகண்டன், பாலமுருகன் மற்றும் விமான நிலைய முனைய மேலாளர் சென் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 186 பயணிகள் மட்டும் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.

372 பேர் அனுப்பி வைப்பு

மீதமிருந்த 334 பயணிகள் உணவு மற்றும் இருக்க இடம் இன்றி திருச்சியில் தவித்து வந்தனர். இதுதவிர கொச்சி மற்றும் சென்னையில் தவித்த பயணிகள் நேற்று திருச்சிக்கு வந்தனர். இங்கிருந்து 2 தனி விமானங்கள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மொத்தம் 372 பேர் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு விமானம் இரவு 10 மணிக்கும், மற்றொரு விமானம் இரவு 11.40 மணிக்கும் திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்டு சென்றன. மீதமுள்ள பயணிகள் மறுமுன்பதிவு செய்து மலேசியாவுக்கு செல்லலாம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்