சர்வீஸ் மையத்தில் தீ விபத்து: 5 கார்கள் எரிந்து நாசம்

சர்வீஸ் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 கார்கள் எரிந்து நாசமானது.

Update: 2020-03-30 22:30 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் அய்யர் காலனியில் கார் சர்வீஸ் மையம் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த சர்வீஸ் மையம் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் தீ மளமளவென பரவியது. 

உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் விலை உயர்ந்த 5 கார்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை எரிந்து நாசமானது. தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்