காவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் - அமைச்சர் நிலோபர் கபில் ஆய்வு

வாணியம்பாடியில் காவலூர் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அமைச்சர் நிலோபர் கபில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-04-07 05:19 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடியில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் சந்தித்து குரான் புத்தகங்கள், பிஸ்கட், பழம் ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர் நேற்று முன்தினம் வாணியம்பாடியில் பெய்த மழை காரணமாக ரெயில் இன்டர்நெட் கோபுரம் சரிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் சுவர் சேதமடைந்த அந்த வீட்டிற்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் காதர் பேட்டை அருகில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் மீது அமைக்கப்பட்டுள்ள ரெயில் இன்டர்நெட் கோபுரத்தை மாற்றியமைக்கும்படி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணியிடம் கூறினார். அதைத்தொடர்ந்து ஆலங்காயத்தை அடுத்த காவலூர் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

மருத்துவ மனையில் பிறந்த குழந்தைக்கு அம்மா குழந்தைகல் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். வாணியம்பாடி தாசில்தார் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், நகர செயலாளர் சதாசிவம், அவைத்தலைவர் சுபான், கிராமநிர்வாக அலுவலர் சற்குணகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்