திருவாரூரில், சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டும் ஆன்-லைன் பதிவு என்பதால் யாரும் பத்திரம் பதியவரவில்லை

திருவாரூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டும் ஆன்-லைன் பதிவு என்பதால் யாரும் பத்திரம் பதியவரவில்லை.

Update: 2020-04-25 23:38 GMT
திருவாரூர், 

திருவாரூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டும் ஆன்-லைன் பதிவு என்பதால் யாரும் பத்திரம் பதியவரவில்லை. எனவே பத்திர எழுத்தர்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்பதிவாளர் அலுவலகம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் பல்வேறு துறைகள் முடங்கிய நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் அரசு பல துறைகளின் செயல்பாடுகளை தளர்வு செய்த நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கொரோனாவினால் வாகன போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியில் வர வேண்டாம் என அரசு அறிவி்த்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டும், ஆன்-லைன் பதிவு என்பதால் யாரும் பத்திரம் பதியவரவில்லை. இதனால் எந்த நேரத்திலும் பரபரப்பாக காணப்படும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கடைகளை திறக்க...

இதற்கு காரணம் ஊரடங்கினால் மக்கள் இன்னும் இயல்பு நிலை திரும்ப முடியாமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் பத்திரப்பதிவு என்பது தற்போது ஆன்-லைன் முறையில் பதிவு செய்யப்பட வேண்டி உள்ளதால், பத்திரப்பதிவு எழுத்தர் அலுவலகம் செயல்படுவதற்கு அரசு உரிய வழிமுறைகள் எதுவும் செய்யாமல் இருந்து வருகிறது.

எனவே பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வரும் எழுத்தர்களுக்கு உரிய வழிகாட்டுதலை அரசு செய்ய வேண்டும். மேலும் எழுத்தர்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்