கோடிக்கணக்கில் கடன் தருவதாக மோசடி; 2 பேர் கைது

தேவகோட்டையில் கோடிக்கணக்கில் கடன் தருவதாக மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-06-04 05:34 GMT
தேவகோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சத்திரத்தார் தெருவில் உள்ள ஒரு வீட்டை சினிமா படம் எடுக்கப்போவதாக திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி (வயது48) என்பவர் வாடகைக்கு எடுத்து உள்ளார். இங்கு குறைந்த வட்டியில் பணம் கடன் தருவதாக இவர்களது ஏஜெண்டுகள் மூலம் பல்வேறு நபர்களை வரவழைத்தார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என பெரிசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரிடம் பெரியசாமி சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதை நம்பி சண்முகம் முன்பணமாக ரூ. 2 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சண்முகம் தகவல் கொடுத்தார்.

கைது

அவருடைய உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அந்த வீட்டை சுற்றிவளைத்து பெரியசாமி மற்றும் அவரது கூட்டாளி சுந்தரபாண்டியனை பிடித்து ரூ.2 லட்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளிகள் குருசாமி,செல்லத்துரை ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்