கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலையில் அண்ணன் கைது

கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் தொழிலாளி கொலை வழக்கில் அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-05 01:38 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி அருகே உள்ள கும்மனூரைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 25). ஓட்டல் தொழிலாளி. அந்த பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மரிக்கம்பள்ளி பாலம் அருகில் தண்ணீர் இல்லாத வற்றிய கிணறு ஒன்றில் அர்ச்சுணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கல்லால் தாக்கி யாரோ கொலை செய்து உடலை கிணற்றில் வீசி இருந்தனர். இந்த கொலை குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் அர்ச்சுணனை கொலை செய்தது அவரது அண்ணன் சகாதேவன் (32) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நானும், எனது தம்பியும் சம்பவத்தன்று மது குடிப்பதற்காக சென்றோம். அந்த நேரம் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நான் போதையில் அருகில் இருந்த கல்லை எடுத்து அவனை தாக்கி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்