தேனி, கம்பத்தில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் உழவர் சந்தை

தேனி, கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-08 01:03 GMT
தேனி, 

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தைகள் மூடப்பட்டன. வாகனங்கள் மூலம் நடமாடும் உழவர் சந்தை செயல்படுத்தப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து உழவர் சந்தைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிகமாக உழவர்சந்தை நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக கடைகளின் முன்பு வெள்ளை நிறத்தில் வட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைகள் நெருக்கமாக அமைக்கப்பட்டு இருந்தன.

தேனி, கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. உழவர் சந்தையில் விவசாயிகள் திறந்தவெளியில் மண் தரையில் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மேற்கூரை வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு வரும் மக்களும் வெயிலில் நின்று காய்கறிகள் வாங்கிச் சென்றனர். இது தென்மேற்கு பருவமழைக் காலம் என்பதால், மழை பெய்தால் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பிற்பகல் வரை உழவர் சந்தை செயல்படுவதால் வெயிலில் வியாபாரம் செய்யும் நிலைமை உள்ளது. எனவே கடைகளுக்கு நிழற்பந்தல் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்