அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கிருமி நாசினி தெளித்தவர் திடீர் சாவு

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கிருமி நாசினி தெளித்தவர் திடீரென இறந்தார்.

Update: 2020-06-10 02:32 GMT
மதுரை,

மதுரை மேலபொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 52 ). இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணியாற்றினார். இந்த நிலையில் கொரோனா தடுப்புக்காக இவர் அங்குள்ள பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை தமிழ்ச்செல்வன் அங்கிருந்த பஸ்கள் மீது கிருமிநாசினி தெளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் அவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கலெக்டரிடம் மனு

இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டர் வினயிடம், தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கட்டாயப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தமிழ்ச்செல்வன் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்