தளவாய்புரம் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை போலீசார் விசாரணை

தளவாய்புரம் அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-06-29 21:30 GMT
தளவாய்புரம்,

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள கூனங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி (வயது 43). மரம் அறுக்கும் தொழிலாளி. இவருக்கு செல்லத்தாய் என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும், கோபி என்ற மகனும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலை இடையன்குளம் கண்மாய் பகுதியில் வேலுமணி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மர்மநபர்கள் இவரின் உடலில் மிளகாய் பொடி தூவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. வேலுமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்