ராயபுரத்தில் சாலையில் திடீர் விரிசலால் பரபரப்பு
ராயபுரத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் கொடிமரத்து சாலையில் கடலோர கப்பற்படை அலுவலகம் உள்ளது. இதன் அருகே நேற்று திடீரென சாலையில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். விரிசல் ஏற்பட்டுள்ள இடத்துக்கு அருகே சாலையின் நடுவே அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது இந்த பகுதியில் கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் இந்த விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.