சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு

சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

Update: 2020-07-12 04:33 GMT
சிவகங்கை,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இங்கு கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான இடவசதி கிடைக்காமல் உள்ளது.

எனவே கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகங்கையில் ஏற்கனவே செயல்பட்ட பழைய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய சிகிச்சை பிரிவு மைய திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் பாஸ்கரன் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு மையத்தை திறந்து வைத்து கூறியதாவது:- சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே 52 படுக்கைகள் கொண்ட கட்டிடம் சீரமைக்கப்பட்டு தற்போது கொரோனா தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த வளாகத்தில் கூடுதலாக 3 கட்டிடங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அதில் 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு மையத்தை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர சிவகங்கை அருகே உள்ள ஒரு கல்லூரியிலும் கொரோனா சிகிச்சை பிரிவு வார்டு தற்காலிகமாக தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) இளங்கோ மகேசுவரன், மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி, டாக்டர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், கண்காணிப்பு மருத்துவர்கள் சையதுமுகமது, பிரகாஷ், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்