திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-07-16 00:16 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, காமராஜரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பசீர்அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி திண்டுக்கல் வாழ் அனைத்து நாடார்கள் குழு செயலாளர் சிற்றம்பலநடராஜன் தலைமையில், ஏராளமானோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் திண்டுக்கல் நாடார் உறவின் முறை, திருமங்கலம் நாடார் உறவின் முறை, சாத்தங்குடி நாடார் உறவின் முறை, விருதுநகர் நாடார் உறவின்முறை, திண்டுக்கல் நாடார் ஐக்கிய சங்கம், நெல்லை நாடார் உறவின் முறை, திண்டுக்கல் நாடார் ஐக்கிய சேவா சங்கம், இந்து நாடார் உறவின் முறை உள்ளிட்ட பல்வேறு நாடார் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நாடார் முன்னேற்ற சங்கம்

திண்டுக்கல் மாவட்ட நாடார் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசைத்தம்பி, ரவீந்திரன், தலைவர் வீரமணி, செயலாளர் மங்கை ராஜா, பொருளாளர் நாகுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதையடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கத்தின் தலைமையில் தலைவர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் சரவணன், ஸ்ரீதரன், பூமண்டலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா திண்டுக்கல் பேகம்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் ஹைருல்லா, மாவட்ட செயலாளர் சுமதி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் அப்துல்ஜப்பார் கலந்து கொண்டு காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பட்டிவீரன்பட்டி

இதேபோல் பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு, பட்டிவீரன்பட்டி காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜாராம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் வத்தலக்குண்டு வட்டார தலைவர் காமாட்சி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபால், மாநில சிறுபான்மை பிரிவு தலைவி ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில கலை இலக்கிய பேரவை துணைச் செயலாளர் சக்திவேல் மாலை அணிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பொன்ராம், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேசபக்தி யாத்திரை குழு தலைவர் மார்க்ஸ், காமராஜர் சிலைக்கு புதிய வேட்டி சட்டை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் காமராஜர் பிறந்த நாள் விழா குழு சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சித்தரேவில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வேட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, ஆத்தூர் வட்டார தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை, வேடசந்தூர்

நிலக்கோட்டை வட்டார, நகர காங்கிரஸ் சார்பில், காமாராஜர் பிறந்தநாள் விழா வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்றவர்கள், தமிழக மீட்பு நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில், வேடசந்தூரில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல் கவுண்டர், வட்டார தலைவர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் காமராஜரின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல எரியோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் உறவின் முறை தலைவர் தனுஷ்கோடி தலைமையிலும், லோக்தந்திரிக் ஜனதாதள் கட்சி பொதுசெயலாளர் பால்ராஜ் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வத்தலக்குண்டு

ஈடன் கார்டன் அரிமா சங்கம் சார்பில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்கு தலைவர் ஜெர்மன்ராஜா தலைமை தாங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு அருகே உள்ள மேலக்கோவில்பட்டி கிராமத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் ராணுவ வீரர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதேபோல் தொல்.திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களின் உருவப்படங்களுக்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள 20-க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் கழக மாவட்ட தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். நகர பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், ஜான்தாஸ், துணை தலைவர்கள் திருக்கண்ணன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் அமராவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்