6 மாதமாக வேலையின்றி தவிப்பு மின்சார ரெயிலில் அனுமதிக்க டப்பாவாலாக்கள் கோரிக்கை

கடந்த 6 மாதமாக வேலையின்றி தவித்துவரும் டப்பாவாலாக்கள் மின்சார ரெயிலில் தங்களை பயணம் செய்ய அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-09-12 21:15 GMT
மும்பை,

மும்பைக்கு உயிர்நாடியாக விளங்கி வரும் மின்சார ரெயில் போக்குவரத்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் படிப்படியான ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவை அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

மின்சார ரெயில்களையே நம்பி பிழைப்பு நடத்திவரும் டப்பாவாலாக்கள் கடந்த 6 மாதமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மும்பையில் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவு கொண்டு செல்லும் டப்பாவாலாக்கள் ரெயிலில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் மும்பை டப்பாவாலா சங்க தலைவர் சுபாஷ் தலேக்கர் மின்சார ரெயிலில் தங்களை அனுமதிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-

ரூ.5 ஆயிரம் நிதியுதவி

அத்தியாவசிய பணியாளர்களின் பட்டியலில் டப்பாவாலாக்களை சேர்த்து உணவு கொண்டு செல்லவும், மின்சார ரெயிலில் பயணம் செய்யவும் அனுமதி தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 130 வருடங்களாக செயல்பட்டு வரும் டப்பாவாலாக்களின் சேவை தற்போது கொரோனாவினால் கடந்த 6 மாதமாக முடங்கியுள்ளது. இதனால் வருமானமின்றி தவிக்கும் டப்பாவாலா குடும்பங்களுக்கு தனியார் தொண்டு அமைப்பினர் உதவிகளை செய்து வந்தனர். கட்டுமான ஊழியர்களுக்கு மாநில அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி இருப்பது போல டப்பாவாலாக்களின் குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்