புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் ரேஷன் கடைகளுக்கு 25 வாகனங்கள் ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் ரேஷன் கடைகளுக்கு 25 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-24 01:45 GMT
புதுக்கோட்டை,

வீடுகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, 3 ஆயிரத்து 501 நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் ரேஷன் கடைகளுக்கான வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ந் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடக்க விழா நடந்து வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 100 நடமாடும் ரேஷன் கடைகளுக்கு 25 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது 1019 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 வாகனங்களும் புதுக்கோட்டைக்கு வந்துவிட்டன.

இந்த வாகனங்களில் ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு தாய் கடையின் விற்பனையாளர் வினியோகிப்பார். இந்த வாகனம் ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தப்படும். இதன் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. அதன்பின் நடமாடும் ரேஷன் கடைகள் பயன்பாட்டிற்கு வரும்“ என்றனர்.

மேலும் செய்திகள்