மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2020-09-24 21:30 GMT
நெல்லை,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு அதிகம் இருக்க கூடாது.

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் பெற்று வருகிற 10.11.2020-க்குள்ளும், புதிதாக விண்ணப்பிக்கிறவர்கள் வருகிற 30.11.2020-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரத்தையும் தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற 15.11.2020-க்குள் இணையதளத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை வருகிற 15.12.2020-க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 30.1.2021-க்குள்ளும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்