மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தி: ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி வயதான தம்பதி தற்கொலை முயற்சி

மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தியில் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற தம்பதி மீட்கப்பட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2020-09-25 02:17 GMT
திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை ரோட்டில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை பக்தர்கள் நீராட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இங்கு நேற்று முன்தினம் வயதான தம்பதியினர் வந்தனர். அவர்கள் படித்துறையில் நின்றவாறு காவிரித்தாயை இருவரும் வணங்கினர். பின்னர், மூதாட்டி தான் அணிந்திருந்த தாலிச்சங்கிலி மற்றும் தங்க கம்மல், வளையல்கள் உள்ளிட்ட நகைகளை கழற்றி அங்கிருந்த உண்டியலில் போட்டார். அதைப்பார்த்த சிலர், அவர்களின் வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணினர். பின்னர் இருவரும், அம்மாமண்டபம் படித்துறையில் இறங்கி கைகோர்த்தவாறு காவிரி ஆற்றில் இறங்கினர்.

ஆற்றில் மூழ்கி தற்கொலை முயற்சி

அப்போதும், இருவரும் காவிரியில் குளிக்க செல்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியாமல் இருவரும் நீரில் மூழ்குவதும், எழுவதுமாக இருந்தனர். நீண்ட நேரமாகியும் இதே நிலை நீடித்ததால், இருவரும் தற்கொலை எண்ணத்துடன்தான் காவிரியில் குளிக்க சென்றது தெரிந்தது.

இதைப்பார்த்த மண்டபத்தில் நின்றிருந்த ஊழியர்கள் சிலர், காவிரி ஆற்றில் இறங்கி இருவரையும் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர். முதலில் வெளியே வரமறுத்த அவர்களிடம் ஆறுதலாக சில வார்த்தைகளை கூறி வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர்.

மகளுடன் மனக்கசப்பு

விசாரணையில் இருவரும், கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 81), மனைவி இந்திராணி (72) என்பது தெரிந்தது. தற்கொலை முடிவை ஏன் எடுத்தீர்கள்? என போலீசார் கேட்டபோது வயதான தம்பதியினர் தழுதழுத்த குரலில் பதில் தெரிவித்தனர். எங்களுக்கு 2 மகள்கள். ஆண் வாரிசு கிடையாது. அவர்களை நல்லபடியாக வளர்த்து படிக்கவைத்தோம்.

நல்ல இடத்தில் இருவருக்கும் திருமணமும் செய்துகொடுத்தோம். தனியாக வசித்த எங்களுக்கு வயதாகி விட்டதால், கோவையில் உள்ள 2-வது மகள் வீட்டில் வசித்தோம். அங்கு மகளுடன் சிறு, சிறு மனக்கசப்பு ஏற்பட்டது. அது எங்களுக்கு மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

காப்பகத்தில் ஒப்படைப்பு

எனவே, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இறுதியாக தரிசித்து விட்டு வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என பஸ்சில் ஏறி திருச்சிக்கு வந்தோம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து காவிரி ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள ஆற்றில் இறங்கினோம். ஆனால், எங்களை மீட்டு விட்டார்கள்.

இவ்வாறு அந்த தம்பதியினர் கூறினர். மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் வயதான தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அம்மா மண்டபத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் வயதான தம்பதியினரை மீட்டு, திருச்சியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லமான கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோவையில் உள்ள மகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்