மெட்ரோ ரெயில் நிலையங்களில் கால்களால் இயக்கப்படும் ‘லிப்டுகள்’ - கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ள லிப்டுகளில் கால்களால் இயக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப சாதனம் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.

Update: 2020-09-30 00:00 GMT
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மின்னணு தொழில்நுட்பங்களை ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி கொரோனா பரவலை தடுக்க கைகளால் பொத்தானை அழுத்தி லிப்டுகள் இயக்கப்படுவதை தவிர்த்து, கால்களால் அழுத்தி லிப்டுகளை இயக்கும் புதிய வசதியை இதனுடைய தலைமை அலுவலகத்தில் கடந்த மே மாதம் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டன. இதற்கு நல்ல பயன் கிடைத்ததை தொடர்ந்து 32 ரெயில் நிலையங்களிலும் உள்ள லிப்டுகளில் கால்களால் இயக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப சாதனம் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் ரெயில் நிலைய கழிப்பறைகளில் தண்ணீர் குழாய்களை இயக்க கைகளை பயன்படுத்தாமல் கால்கள் மூலம் இயக்கும் கருவிகள் 32 ரெயில் நிலையங்களில் உள்ள 190 கழிப்பறைகளில் நிறுவப்பட்டு உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை மிக கவனமுடன் உறுதி செய்யும் விதத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்த இரண்டு வசதிகளை நாட்டிலேயே முதன் முறையாக நிறுவி உள்ளது.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்