ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2020-09-30 00:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 2020-21-ம் ஆண்டுக்கான கடன் திட்டம் குறித்த கையேடு மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் 2019-20-ம் ஆண்டுக்கான ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய செயல்பாடுகள் குறித்த வருடாந்திர அறிக்கையையும் வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2019-20-ம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.9 ஆயிரத்து 652 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.11 ஆயிரத்து 326 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது 117 சதவீதம் ஆகும். இந்த இலக்கை அடைவதற்கு பணியாற்றிய வங்கியாளர்கள் அனைவரின் பங்கும் பாராட்டுக்கு உரியது.

கடன் வழங்க இலக்கு

நடப்பு நிதியாண்டுக்கான இலக்கு ரூ.12 ஆயிரத்து 84 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கினை அடைவதற்கு அனைத்து வங்கியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கு அனைத்து வங்கிகளும் தற்போது இருந்தே ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியான அனைவருக்கும் கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் யோகானந்த், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் மு.துரைசாமி, கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி இணை மேலாளர் விஜயகுமார் மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்