சீர்காழியில், கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

சீர்காழியில், கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

Update: 2020-10-22 22:30 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அருள்குமார்(வயது 54). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அருள்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 7 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானால் சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே போலீசார் பணிக்கு திரும்புகின்றனர்.

போதிய ஓய்வு இல்லாமல் பணிக்கு வருவதால் சிலர் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு 20 நாட்கள் ஓய்வு கொடுத்து அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்றுக்கு பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமாரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பதே போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்