ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது

ஆண்டிமடம் அருகே விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-24 22:32 GMT
ஆண்டிமடம், 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது நிலத்தில் அதே ஊரை சேர்ந்த விவசாயியான வேல்முருகன்(வயது 40) என்பவர் கடந்த 6 மாதங்களாக குத்தகைக்கு பயிர்செய்து வந்துள்ளார். அந்த விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். காட்டுப்பகுதி என்பதால் பன்றிகள் அடிக்கடி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இதனால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரிஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, அந்த பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தவர் அருகில் மின்சார வேலி அமைத்து இருந்தது தெரியவந்தது.

மின்சாரம் பாய்ந்து...

இதையடுத்து போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த மோகனின் மனைவி நிர்மலா(வயது 40) என்பதும், இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, பின்னர் சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

கைது

மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நிர்மலா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் நடந்தே ஓலையூர் பகுதிக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்வேலி கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேல்முருகனை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்