திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-27 02:48 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் குளத்துதெரு உள்ளது. இந்த தெருவில் சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று உள்ளது.இதனால் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. மேலும் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவித தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த சாலையில் அங்கன்வாடி மையம் உள்ளதால் அம்மையத்திற்கு செல்லும் குழந்தைகள் சேற்றில் விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.

நாற்று நடும் போராட்டம்

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அப்பகுதியில் திரண்டு அங்குள்ள சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி செய்து தரக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்