ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

ஆவடி அருகே திருமணமான 2 மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-28 04:36 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை, வித்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 23). எலக்ட்ரீசியன். இவருக்கும் ஆவடியை சேர்ந்த நர்மதா (21) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் திருமணமான நாள் முதல் நர்மதாவுக்கும் அவரது கணவர் மற்றும் மாமியார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் நர்மதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஒரு வாரத்துக்கு முன்பு மாமியார் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார், மனைவி நர்மதாவை தன்னுடன் வரும்படி அழைத்தார்.

மீண்டும் நர்மதாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் கோபித்து கொண்டு நேற்று முன்தினம் நர்மதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இதனால் விரக்தியடைந்த சுரேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருநின்றவூர் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான இரண்டே மாதத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்