கேளம்பாக்கம் அருகே, இளம்பெண் மர்மச்சாவு - கணவர், மாமனார் கைது

கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-11-22 21:45 GMT
திருப்போரூர்,

கேளம்பாக்கத்தை அடுத்த ஜோதி நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ்ராம் (வயது 33). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சவுமியா (வயது 27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக சவுமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த மாதம் சவுமியாவின் தந்தை ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் கணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்ராம், சவுமியாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக கூறி போனை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கத்திற்கு வந்தனர். சவுமியாவின் இடது கையில் கத்தியால் வெட்டப்பட்ட தழும்பு இருந்தது. இதையடுத்து சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், தனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்