காஞ்சீபுரத்தில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபருக்கு பாராட்டு

காஞ்சீபுரத்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Update: 2020-11-29 22:00 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஜெம் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). இவர் பல்லவன் நகரில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த பணப்பையை சரவணகுமார் எடுத்து பார்த்தபோது அதில் ரூ.25 ஆயிரத்து 530 இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனிடம் நடந்த விவரத்தை கூறி பணத்தை ஒப்படைத்தார்.

போலீசார் அந்த பணப்பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டதில் பணத்தை தொலைத்தவர் காஞ்சீபுரம் பல்லவன் நகரை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரிய வந்தது.

அதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் பணத்தை தொலைத்த அசோக்குமாரை ஒரு மணி நேரத்தில் நேரில் வரவழைத்து பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், சீதாபதி ஆகியோர் உடன் இருந்தனர். சரவணகுமாரின் செயலை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்