தா.பழூர் அருகே துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

தா.பழூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-01-10 23:21 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன்(வயது 63). விவசாயியான இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, வாழைகுறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்கு குடும்பத்தோடு சென்றார். பின்னர் இரவு 8 மணி அளவில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன.

40 பவுன் நகைகள் திருட்டு

இதனால் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் இருக்கிறதா? என்று அவர்கள் பார்த்தனர். அப்போது அதில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது, வீட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கேட்டை உடைத்து நுைழந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்