உடுமலை-மூணாறு சாலையில் வாகனங்களில் சென்றவர்களை துரத்திய காட்டுயானைகள்

உடுமலை-மூணாறு சாலையை கடக்க முயன்ற காட்டுயானைகள் வாகனங்களில் சென்றவர்களை துரத்தியது. யானைகளை தொந்தரவு செய்தவர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-18 05:45 GMT
தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளும் தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை அதிகம் நம்பி உள்ளது.

பருவமழை தீவிரம்

இந்த சூழலில் கடந்த ஆகஸ்டு மாதம் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக வனப்பதியில் காய்ந்திருந்த மரங்கள் மற்றும் செடிகள் துளிர்விட்டு பசுமைக்கு திரும்பியது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவுத்தேவை பூர்த்தி அடைந்தது.

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையும் வனப்பகுதியில் தீவிரமடைந்தது. இதனால் அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக வன விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவுத்தேவை முற்றிலுமாக பூர்த்தியாகும் சூழல் உருவானது.

சாலையை கடக்கும் யானைகள்

மேலும் அடிவார பகுதியில் முகாமிட்டுள்ள யானை, கடமான், காட்டெருமை உள்ளிட்டவை வனப்பகுதிக்கு திரும்பிச்சென்றது. ஆனால் மழையின் காரணமாக அங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளதாக தெரிகிறது. அவை வனவிலங்குகளை தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

கொசுக்கடியில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மீண்டும் அடிவாரப்பகுதிக்கு திரும்பி வந்துவிட்டதாக தெரிகிறது. மேலும் அடிவாரப்பகுதியில் அமராவதி அணை அருகே முகாமிட்டுள்ள யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் யானை மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் நின்று கொண்டது.

இதன் காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த மலைவாழ்மக்களில் ஒருவர் யானையை சமாளித்து காட்டுக்குள் விரட்டினார். யானையும் அவரது கட்டளைக்கு கீழ்படிந்து சாலையின் ஓரத்திற்கு சென்றது.

வனத்துறை எச்சரிக்கை

இதுகுறித்து தகவல் உடுமலை வனத்துறையினருக்கு கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையில் வனத்துறையினர் உடுமலை- மூணாறு சாலையில் முகாமிட்டிருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.

மேலும் உடுமலை- மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்