பழனிக்கு பாத யாத்திரை சென்ற 5 வீடுகளில் நகை பணம் திருட்டு

சுல்தான்பேட்டை அருகே பெரிய வதம்பச்சேரியில் பழனிக்கு பாத யாத்திரை சென்ற 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

Update: 2021-01-31 00:30 GMT
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே பெரிய வதம்பச்சேரியில் பழனிக்கு பாத யாத்திரை சென்ற 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை  மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

பழனிக்கு பாதயாத்திரை

சுல்தான்பேட்டை ஒன்றியம்  பெரியவதம்பச்சேரி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் மிகஅதிக அளவில் உள்ளனர். இங்குள்ள நெசவாளர்கள்சிலர் ஒன்றிணைந்து ஆண்டு தோறும்பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத் திரையாகசெல்வது வழக்கம். 

இந்நிலையில், பெரிய வதம்பச்சேரியை சேர்ந்த நெசவாளர்கள் சண்முகசுந்தரம், மந்திராசலம், சந்திரா,மகாலட்சுமி மற்றும் ஜோதிசரவணன் ஆகியோர் ஒரே குழுவாக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்  தினம் மதியம் பழனிக்கு  பாதயாத்திரை சென்றனர்.

நகை-பணம் திருட்டு
இந்த நிலையில் இரவு நேரத்தில் அடுத்தடுத்து உள்ள இவர்கள்  5 பேரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவை உடைநத்து நகை, பணத்தை திருடிச்சென்றனர். 

இதில் சண்முகசுந்தரம் வீட்டில்ரூ.35 ஆயிரம் ரொக்கம், மந்திராசலம் வீட்டில் 4 பவுன் நகை, ஒரு ஜோடிகால் கொலுசு, சந்திரா வீட்டில் ரூ.21 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்க நகை, மகாலட்சுமி வீட்டில் ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 கிராம் தங்க  அரைஞாண் கயிறு, ஜோதி சரவணன் வீட்டில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைதிருடி சென்று உள்ளனர்.

மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு
மேலும் பேச்சிமுத்து என்பவரது வீட்டில் திருட சென்ற அவர்கள், அங்கு இருந்த இரண்டு நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நாய்கள் குரைக்க தொடங்கியதால், அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். 

இந்த நிலையில் புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 5 பேரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்