கெலமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்

கெலமங்கலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-02-01 17:54 GMT
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜெ.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவருடைய மகன் நாகராஜ் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் மத்தூரப்பா. அவருடைய மகன் முனிராஜ் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூர் அடுத்த தொரப்பள்ளிக்கு சென்று விட்டு இரவு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். கெலமங்கலம் அருகே சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக இறந்தார். முனிராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்