காஞ்சீபுரத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு; மற்றொருவர் படுகாயம்

காஞ்சீபுரத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-02-02 03:59 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 43). இவரது நண்பர் சின்ன காஞ்சீபுரம் ஐதர்பட்டரை தெருவை சேர்ந்த செந்தில்குமார் (30) இவர்கள் இருவரும் பேனர் வைக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயன்ற போது, உயர் மின்னழுத்த கம்பியின் மீது பேனரின் கம்பி உரசியது. உடனே இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு கை, காலில் படுகாயம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார் படுகாயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்