கீழப்பாவூரில் பீடி கடையை தொழிலாளர்கள் முற்றுகை
கீழப்பாவூரில் பீடி கடையை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஒரு தனியார் பீடி கடையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீடி சுற்றி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பீடி சுற்றும் மூலப்பொருட்களான பீடி இலை மற்றும் தூள் தரமானதாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், தரமானதாக வழங்கவில்லையாம்.
இதனை கண்டித்தும், பீடி சுற்றும் கூலியை வங்கி கணக்கில் இருந்து எடுப்பதற்கு வசதியாக பீடிக்கடை பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்க வலியுறுத்தியும் பீடி தொழிலாளர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் இந்த பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என நிர்வாகத்தினர் கூறியதன் பேரில் பீடி தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.