குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு: மாநகர பஸ் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமாக எழுதிய கடிதம் சிக்கியது

குழந்தை இல்லாத ஏக்கத்தில் மாநகர பஸ் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2021-02-03 04:53 GMT
பெரம்பூர், 

கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபு. இவர் சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமராவதி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது.

இந்த நிலையில் இந்த தம்பதியருக்கு இதுவரையும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அமராவதி சில நாட்களாகவே மிகுந்த மனவருத்ததில் இருந்துள்ளார்.

இதற்கிடையே பிரபு நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அன்றைய தினம் மாலை பிரபுவின் தாயார் மருமகள் அமராவதியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சென்ற அவர், அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அமராவதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

கடிதம் சிக்கியது

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் நடத்திய சோதனையில் இறப்பதற்கு முன் அமராவதி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், எங்களுக்கு திருமணமாகி 2 வருடமாகியும் குழந்தை இல்லை. இதனால் மன வேதனைக்கு ஆளாகிய நான், வாழப்பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்