சோழிங்கநல்லூர் அருகே கஞ்சா விற்பனை; பெண் உள்பட 5 பேர் கைது

சோழிங்கநல்லூர் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-11 03:52 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த வீட்டை சுற்றிவளைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கஞ்சாவை சிறு சிறு பொட்டலமாக கட்டி விற்பனை செய்வது தெரிய வந்தது. 

அங்கு இருந்த பெண் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கலைவாணி (வயது 28), தமிழரசு (25), சிவா (23) சதீஷ் (23) அருண் (19) என்பது தெரியவந்தது. அவர்களில் கலைவாணி மற்றும் தமிழரசு கடந்த 2014-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. 

கடந்த 6 மாதமாக அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கஞ்சா பொட்டலங்கள் செய்ய பயன்படுத்திய எந்திரம், கத்தி, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்