மனைவிக்கு கோடரி வெட்டு; கணவர் கைது

மனைவிக்கு கோடரி வெட்டு; கணவர் கைது

Update: 2021-02-17 19:03 GMT
காரைக்குடி
காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 62). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி கண்ணகி(53) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாண்டி மது குடிக்கும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இரவு பாண்டி வீட்டிற்கு வந்த போது, அவரது மகன்கள் இருவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். மனைவி கண்ணகி சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது பாண்டி, தனது மனைவி கண்ணகியிடம் நான் சொன்னபடி சாப்பாடு தயார் செய்ய மாட்டாயா என்று கூறி சத்தம் போட்டுள்ளார். இதைதொடர்ந்து கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி வீட்டில் இருந்த கோடரியை எடுத்துவந்து கண்ணகியின் பின் தலையில் வெட்டியும், அடித்தும் உள்ளார். இதனால் கண்ணகி பலத்த ரத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்