வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

காலிபணியிடங்களை நிரப்ப கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்

Update: 2021-02-17 19:04 GMT
சிவகங்கை
காலிபணியிடங்களை நிரப்ப கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
வேலை நிறுத்த போராட்டம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகிய காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும், பட்டதாரி அல்லாதவர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்த வேண்டும், கொரோனாவால் நிறுத்தப்பட்ட துறை தேர்வு மற்றும் துறை சார்ந்த பயிற்சியிலிருந்து பதவி உயர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
அகவிலைப்படி
பேரிடர் மேலாண்மை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிக்கு என துணை ஆட்சியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும், நிறுத்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஒப்படைப்பு விடுப்புகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ்போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்டத்தில் 224 வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வருவாய் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசன் கூறியதாவது, சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வருவாய்த்துறை அலுவலர்களின் வேலைநிறுத்தத்தால் தேர்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும் வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் ஆனந்த பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்