உத்திரமேரூர் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

உத்திரமேரூர் அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி யிடம் நகை பறித்தது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-02-18 06:15 GMT
உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தோட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52). இவரது மனைவி புஷ்பவதி (42). இவர்களுக்கு மோனிஷா (6), மோஷிகா (6) என்று 2 மகள்கள் உள்ளனர். கோவிந்தராஜின் தாயார் பேபி அம்மாள் (75).

நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் தனியறையில் தூங்கி கொண்டிருந்தார். அவரது தாயார் பேபி அம்மாள் அறையின் முன்பாக வீட்டுக்குள் படுத்திருந்தார். இரவு மர்மநபர்கள் 2 பேர் தாழ்ப்பாளை இரும்பு கம்பியால் நீக்கி கதவை திறந்துள்ளனர்.

நகை பறிப்பு

கோவிந்தராஜ் படுத்திருந்த அறையின் கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாளிட்டு விட்டு அறையின் முன்பாக படுத்திருந்த பேபி அம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பேபியம்மாள் அறை கதவை திறந்து தனது மகனிடம் நகை பறித்து சென்ற விவரத்தை தெரிவித்தார். அருகில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. உடைத்து இருந்தால் அதில் இருந்த நகையும் கொள்ளை போயிருக்கும்.

இதுகுறித்து கோவிந்தராஜ் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்