இருதரப்பினரிடையே மோதல்; பெண் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 8 பேர் படுகாயம்

வாலிகண்டபுரத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-02 19:47 GMT
மங்களமேடு:

மோதல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கலியம்மாள்(வயது 36). இவருடைய குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (24) குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு திடீரென இரண்டு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்,
18 பேர் மீது வழக்கு
இந்த தாக்குதலில் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள், ராமசாமி (61), பழனியம்மாள் (55), தினேஷ் (25) ஆகியோரும், மற்றொரு தரப்பில் கமலக்கண்ணன் (24), அண்ணாதுரை (56), முத்துசாமி (58), புஷ்பவல்லி (28) ஆகியோரும் பலத்த காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதல் குறித்து கலியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கமலக்கண்ணன் (26), முத்துசாமி (52), அண்ணாதுரை (57) உள்பட 9 பேர் மீதும், கமலக்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் அய்யாக்கண்ணு (45), ரமேஷ் (26), தினேஷ் (27) ஆகியோர் உள்பட 9 பேர் மீதும் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

மேலும் செய்திகள்