மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

கீழப்பழுவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-07 19:52 GMT
கீழப்பழுவூர்:

வாலிபர்கள்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் முருகனின் மகன் அஜித்குமார்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் கர்ணனும்(32) ஆழ்துளை கிணறு அமைக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்த பின்னர், அவர்கள் 2 பேரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரத்துடன் கூடிய வாகனத்தில் வெற்றியூர் பிரிவு பாதை அருகே சென்றனர். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரைவெட்டி நோக்கி சென்றனர்.
சாவு
அப்போது அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் அஜித்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கர்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார், அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்