எட்டயபுரம் அருகே லாரியை கடத்தி விபத்தை ஏற்படுத்திய வாலிபர் கைது காயமடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

எட்டயபுரம் அருகே லாரியை கடத்தி கார்மீது மோதி விபத்தை ஏற்படுத்தி 4 பேரை காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-03-09 12:29 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே லாரியை கடத்தி கார்மீது மோதி விபத்தை ஏற்படுத்தி 4 பேரை காயப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாரி கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் நவமணி மகன் ஜான்சன் (வயது 30). லாரி டிரைவர். இவர் தனது லாரியை எட்டயபுரம் - கோவில்பட்டி சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அருகிலிருந்த ஓட்டலில் சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. 
இதுகுறித்து அவர் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார். மேலும், இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இந்த நிலையில், கடத்தப்பட்ட லாரியை வாலசமுத்திரம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் லாரியில் இருந்த இருக்கன்குடியைச் சேர்ந்த சமுத்திரகனி மகன் வெற்றிவேல் குமார் (25) என்பவரை பிடித்தனர். மதுபோதையில் அவர் லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது. 
வாலிபர் கைது
இதனிடையே லாரி கடத்திச் சென்றவர், எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வைகுண்டம், இசக்கி, பேச்சியம்மாள், மாடத்தி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து வெற்றிவேல்குமாரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்