மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி விழுந்த தொழிலாளி சாவு

மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-09 19:47 GMT
பெரம்பலூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் வடிவேல் முருகன் (வயது 29). கடந்த ஒரு ஆண்டாக வடிவேல் முருகன் சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் செல்வியை, தனது உறவினர் யாருக்கும் தெரிவிக்காமல் வடிவேல் முருகன் திருமணம் செய்து கொண்டு லாடபுரத்தில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அதிகாலை மாடியில் இருந்து வடிவேல் முருகன் கீழே இறங்கி வந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த வடிவேல் முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து ஜோதிராமலிங்கம் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்