மதுரை கூடல்புதூரில் கூலி தொழிலாளி வெட்டி கொலை

மதுரை கூடல்புதூரில் கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்

Update: 2021-03-20 20:51 GMT
மதுரை
மதுரை கூடல்புதூரில் கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கூலி தொழிலாளி
மதுரை அய்யர்பங்களா உச்சப்பரம்புமேடு சீனிவாசா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 55), கூலி தொழிலாளியான இவர் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவரது உறவினர் காமராஜ்.  இவரும் கூடல்புதூர் குட்ஷெட் பகுதியில் பன்றி வளர்த்து வருகிறார். தொழில் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை செந்தில்குமார் வளர்த்த பன்றி ஒன்றை காணவில்லை. அதனை தேடி அவர் பல்வேறு இடங்களுக்கு சென்றார்.
கடைசியில் காமராஜ் பன்றி வளர்க்கும் இடத்திற்கு அவர் சென்று தனது பன்றி குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து செந்தில்குமார் புறப்பட்டு சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை 
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே செந்தில்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்தும் கூடல்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் காமராஜ் மகன் விஜய் மற்றும் தங்கபாண்டி, சிவா உள்பட 4 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்