திறந்த வேனில் நின்றவாறு கையசைத்து சென்ற விஜயகாந்த்

பெரம்பலூரில், பிரசார நேரம் கடந்ததால் திறந்த வேனில் நின்றவாறு விஜயகாந்த் கையசைத்து சென்றார். இதனால் அவரது பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-04-02 21:07 GMT
பெரம்பலூர்:

காத்திருந்த தொண்டர்கள்
தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பெரம்பலூர் (தனி) தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி இரவு 8 மணி முதலே தொண்டர்கள் உள்ளிட்டோர் விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்த நிலையில், சில தொண்டர்கள் சாலையில் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது.
ஏமாற்றம்
இந்நிலையில் இரவு 11.15 மணிக்கே விஜயகாந்த் பெரம்பலூருக்கு வருகை தந்தார். தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணி வரையே பிரசாரம் செய்ய அனுமதி உண்டு. இதனால் விஜயகாந்த் பிரசாரம் செய்து பேசாமல், திறந்த வேனில் நின்றபடி கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து வணங்கியும், கையசைத்து விட்டும் சென்றார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜயகாந்தை நேரில் பார்ப்பதோடு, அவருடைய பேச்சை கேட்பதற்கு கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் பேச்சை கேட்க முடியாதது, தே.மு.தி.க. தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்