தமிழ்நாட்டில் நுழைந்துவிட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது; திருமாவளவன் பேச்சு

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத தமிழ்நாட்டில் நுைழந்துவிட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று திருமாவளவன் எம்.பி. பேசினார்.

Update: 2021-04-03 21:29 GMT
மங்களமேடு:

பிரசாரம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அகரம்சீகூர் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-
தி.மு.க. கூட்டணி, மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணியாகும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தை மோடியும், அமித்ஷாவும் தான் ஆட்சி செய்தனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத தமிழ்நாட்டில் நுழைந்து விட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பா.ஜ.க.வின் கனவு பலிக்காது.
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
மோடி தமிழகத்திற்கு வந்து சென்றால் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. பண மதிப்பிழப்பு, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற ஆபத்தான சூழ்நிலையில் நாடு பேராபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பெயரை தக்சிணபிரதேசம் என்று மாற்றம் செய்து விடுவார்கள். அவர்களை விடக்கூடாது. எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தி.மு.க.விற்காக உழைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்