தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கன்டெய்னர் லாரியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வந்ததால் பரபரப்பு தி.மு.க.வினர் போராட்டம்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு வந்த ஓட்டுப்பதிவு எந்திரங்களால் பரபரப்ப ஏற்பட்டது. இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-04-07 13:39 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு வந்த ஓட்டுப்பதிவு எந்திரங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
தொடர்ந்து வாக்குச்சாவடியில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் பணி நடந்தது.
தி.மு.க.வினர் போராட்டம்
இந்த நிலையில் 5 கன்டெய்னர் லாரிகளில் மேலும் சில வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்த தி.மு.க.வினர் இதுகுறித்து லாரிகளில் வந்தவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் எனவும், ஓட்டுப்பதிவுக்கான கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் எனவும் தெரிவித்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த தி.மு.க.வினர் அந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட எந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கும், அதுபோல் வாக்குப்பதிவு மையங்களில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  
பரபரப்பு
இதையடுத்து தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்