குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

கூடலூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2021-04-07 18:13 GMT
கூடலூர்

கூடலூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

குடிநீர் கிடைக்காமல் அவதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூர் பகுதியில் ஓ.வி.எச். சாலை, கே.கே. நகர், குறிஞ்சி நகர், பாரதி நகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. 

ஆனால் தற்போது கோடைகாலம் என்பதால், தடுப்பணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதன் காரணமாக 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதற்கு தீர்வு காண ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 

ஆனால் மின் இணைப்பு வழங்காததால், அந்த திட்டம் முழுமை பெறவில்லை.
இதற்கிடையில் குடிநீர் சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை நேரடியாக புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த மேல்கூடலூர் பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் குடிநீர் கேட்டு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்ட நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, குடிநீர் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

ஆழ்துளை கிணறு

அப்போது பொதுமக்கள் கூறுகையில், 2 வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. அப்போதும் குழாயில் மிகக்குறைவாகவே தண்ணீர் வருகிறது. அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றனர்.  பின்னர் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது ஆழ்துளை கிணற்றில் குழாய்கள், மின்மோட்டார் பொருத்தி நாளை (இன்று) குடிநீர் வழங்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினர். இதை ஏற்று மதியம் 12.30 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்